Muslim higher secondary school abiramam

Muslim higher secondary school abiramam,முஸ்லிம் மேல்நிலை பள்ளி அபிராமம் 








அபிராமம் நத்தம் மக்களின் கல்வி வளர்ச்சிகென கான்பஹதூர் ஜனாப்.V.M.அப்துல் ரஹ்மான் அம்பலம் அவர்களின் தலைமையின் கீழ் அப்பொழுது பர்மாவில் வாணிபம் செய்து வந்த அபிராமம், நத்தம் முஸ்லிம் பெரியோர்களின் முயற்சியால் அபிராமத்தில் 23.06.1924-ல் முஸ்லிம் செகண்டரி ஸ்கூல் என்ற பெயரில் உயர் தொடக்கப்பள்ளி ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. அதற்கென் ஒரு பெரும் நிதி திரட்டி 03.03.1928-ல் இரங்கூன் நகரில் அபிராமம் முஸ்லிம் வித்யா தர்ம பரிபாலன் சபை என்ற பெயரில் 1860 ஆம் வருடத்து சங்க ரிஜிஸ்ட்ரேசன் 21 வது ஆக்டுப்படி பதிவு செய்யப்பட்டது. இச்சபைக்கு ஜனாப்.V.M.அப்துல் ரஹ்மான் அம்பலம் அவர்கள் முதல் ஆயுட்கால தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அச்சபையின் முயற்சியால் 01.02.1934 ஆம் ஆண்டு முதல் இது உயர்நிலைப் பள்ளியாக உயர்த்தப்பட்டது.
கான்பஹதூர் ஜனாப்.V.M.அப்துல் ரஹ்மான் அம்பலம் அவர்களின் பெரும் நிதி உதவியாலும், அபிராமம் நத்தம் முஸ்லிம் பெரியோர்களின் தாரளமான நிதி உதவியாலும் மிகப்பெரிய 'H' வடிவ கட்டிடம் ஒன்று 8 ஏக்கர் நிலபரப்பளிவில் கட்டப்பட்டு உயர்நிலைப் பள்ளியாக உயர்த்தப்பட்ட நம் பள்ளி "முஸ்லீம் உயர் நிலைப் பள்ளி" என்ற பெயருடன் இக்கட்டிடத்திலேயே 01.02.1934 முதல் இயங்க ஆரம்பித்தது. நம் பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்கு கான்பஹதூர் ஜனாப்.V.M.அப்துல் ரஹ்மான் அம்பலம் அவர்கள் 8 ஏக்கர் நஞ்சை நிலம் நம் பள்ளிக்கு இலவசமாக கொடுத்து உதவினார்கள்.
இந்த உயர்நிலைப் பள்ளி தொடங்கப்பட்ட பின்னர் மேற்கண்ட முஸ்லிம் செகண்டரி ஸ்கூல் ஆரம்பப்பள்ளியாக மாற்றப்பட்டது. அதன் பின்னர் நத்தத்திலும் ஒர் ஆரம்பப்பள்ளி நிறுவப்பட்டது. இப்பள்ளிகளின் அலுவல்கள் அனைத்தும் பரிபாலன சபையினரால் தேர்ந்தெடுக்ப்பட்ட கெளரவப் பிரதிநிதி ஒருவரால் கவனிக்கப்பட்டு வந்தன.
அப்போதுள்ள கல்வி விதிகளின் படி ஆசிரியர் அலுவலர்களுக்கான மாத ஊதியத்தின் பெரும்பகுதியை நிர்வாகத்தினரே கொடுக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால் பர்மாவில் ஏற்பட்ட மாற்றங்களால் அபிராமம் நத்தம் ஊர் மக்களின் பொருளாதார நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. இதனால் மூன்று பள்ளிகளையும் நிர்வகிப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. அந்த இக்கட்டான நேரத்தில் நத்தம் ஜனாப் சங்கு K.E. முகம்மது அபுபக்கர் அவர்கள் தானே முன்வந்து பள்ளி நிர்வாகத்தினை ஏற்று தனது சொந்தப் பணத்தினை செலவழித்து, பள்ளிகள் மீண்டும் நல்ல முறையில் நடைபெறப் பெரிதும் உதவினார்கள். அவர்கள் பலகாலம் பள்ளியின் நிர்வாகியாக இருந்து பள்ளியின் முன்னேற்றத்திற்குப் பெரிதும் பாடுபட்டார்கள்.
ஜனாப் O.A. செய்யது மூசா அவர்களின் பெருமுயற்சியில் "அபிராமம் கல்விப் பொறுப்புக் கழகம்" என்ற பெயரில் சென்னையில் 22.05.1957 அன்று பதிவு செய்யப்பட்டது. இதன் பதிவு எண் : 33/1957 ஆகும். ரங்கூனில் பதிவு செய்யப்பட்ட இந்தக் கழகத்தை இந்தியாவில் பதிவு செய்து அதன் முதல் தலைவராக ஜனாப் O.A. செய்யது மூசா அவர்கள் பொறுப்பேற்று "அபிராமம் கல்விப் பொறுப்புக் கழகத்தினை மீன்டும் ஒளிபெறச் செய்தார். இதற்கு உறுதுணையாக ஜனாப் M.M. அகமது நெய்னார், ஹாஜி.A.A. சேக் தாவூது மற்றும் S.O.முகமது யூசுப் ஆகியோர் பக்கபலமாக நின்று இந்தக் கல்விப் பொறுப்புக்கழகம் சிறப்பாக நடைபெற உதவினார்கள்.
கல்வித் திட்டத்தின் கீழ் 1978 ஆம் ஆண்டு முதல் நம் பள்ளியில் 12ஆம் வகுப்பு புகுத்தப்பட்டு முஸ்லீம் மேல் நிலைப் பள்ளியாக உயர்த்தப்ட்டது. இப்பள்ளி மேல் நிலைப் பள்ளியாக மாற்றப்பட்டதின் மூலம் பின் தங்கிய இப்பகுதி மாணவர்கள் உயர்கல்வி கற்கும் வாய்ப்பு அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் தர்ம சிந்தனை கொண்ட பொது மக்களும், பள்ளியின் பழைய மாணவர்களும், நிர்வாகத்தினருக்கு மேலும் பல உதவிகள் புரிந்தால் அரிதின் முயன்று நம் பள்ளியை மேலும் முன்னேற்றம் அடையச் செய்ய முடியும். நிதி மிகுந்தோர் பொற்குவை தாரீர்! நிதி குறைந்தோர் காசுகள் தாரீர்!
Tags: , ,

About author

Curabitur at est vel odio aliquam fermentum in vel tortor. Aliquam eget laoreet metus. Quisque auctor dolor fermentum nisi imperdiet vel placerat purus convallis.

0 comments

Leave a Reply